சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (103). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 2018 ஜூலை 9ம் தேதி அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதியினரின் 5ம் வகுப்பு படித்து வந்த 10 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். அதன் பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோர் இதுதொடர்பாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பரசுராமன் மீது புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் அமுதா வாதிட் டார். கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பரசுராமன் மீதான வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி சுபத்ரா தேவி அவருக்கு போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றொரு பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறை சார்பில் ரூ.1.5 லட் சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் பரசுராமன் ரூ 45 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.