திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கல்லணை பிரிவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் திருவெறும்பூர் சுருளி கோயில் தெருவை சேர்ந்த பாஜ மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் (47), தனது நண்பருடன் டூவீலரில் வந்து பெட்ரோல் போட்டுள்ளார்.
அதற்குரிய தொகையை பே டிஎம்மில் செலுத்த முயற்சித்தபோது ஊழியர்கள் தேசிங்கு, பாலமுருகன், மேனேஜர் சிவனேசன் என்பவருக்கும் விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவனேசன், ஜெயசிங், பாலமுருகன் ஆகியோரை விஜயகுமார் மற்றும் பாஜ நகர்ப்புற வளர்ச்சி துறை மாவட்ட துணைத்தலைவர் சிவா(எ)நமச்சிவாயம், பாஜ வடக்கு மண்டல தலைவர் சக்திவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் தரப்பினரும் பாஜவினரை தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் திருவெறும்பூர் காவல் நிலைத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், நமச்சிவாயம், சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.