×

சேத்துப்பட்டு அருகே விபத்து மரத்தில் கார் மோதி தீப்பற்றி எரிந்தது-ஆரணியை சேர்ந்த டாக்டர் பலி; மனைவி படுகாயம்

சேத்துப்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் ஜெயசீலன்(70), இவரது மனைவி சுகந்தி(68). இருவரும் மகப்பேறு டாக்டர்கள். இவர்களது மகள் சுகன்யா பாண்டிச்சேரியில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயசீலன், சுகந்தி ஆகியோர் மகளை பார்ப்பதற்காக புதுச்சேரிக்கு காரில் சென்றனர். மகளை பார்த்துவிட்டு நேற்று காலை புதுச்சேரியில் இருந்து வீடு திரும்பினர்.

காலை 10.30 மணியளவில் சேத்துப்பட்டு அடுத்த தத்தனூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர். காரை டாக்டர் சுகந்தி ஓட்டினாராம். பெட்ரோல் பங்க்கில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தை கண்ட பொதுமக்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர்.

அதற்குள் கார் குபீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜன், எஸ்ஐ வரதராஜன் மற்றும் சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவநேசன் தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வண்டி எரிந்து எலும்புக்கூடானது.

மேலும், கார் மரத்தில் மோதியதில் படுகாயம் அடைந்த டாக்டர்கள் ஜெயசீலன், அவரது மனைவி சுகந்தி இருவரும் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் ஜெயசீலன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Dr ,Bali ,Arani , Jayaseelan (70) and his wife Sukanti (68) are from Arani, Thiruvannamalai district. Both are obstetricians.
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!