டெல்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலையிலான சிறப்பு அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஏற்கனவே ஆஜராகி இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முக்கிய சாட்சியங்கள் ஏற்கனவே மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் சாட்சியங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்தார்.
இதனை பரிசீலித்த நீதிபதிகள் இந்த மேல்முறையீடு தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் உத்திரபிரதேச அரசு பதில் அளிக்க உத்தவிட்டனர். மேலும் சாட்சியங்கள் மீதான தாக்குதலை உச்சநீதிமன்றம் தீவிரமாக பார்க்கிறது. அவர்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உத்திரபிரதேச துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசரணையை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.