சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப் மீதான வட்டி சதவீதம் 8. 50 லிருந்து 8. 10 ஆக குறைக்கப்பட்டது.
கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக பி.எப் மீதான வட்டி குறைக்கப்படவில்லை. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக பி.எஃப் வட்டி விகிதம் 8.50% ஆக நீடித்து இருந்தது. இந்தநிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகிதம் குறைந்துள்ளது. நாட்டில் பணவீக்க விகிதம் உச்சத்தினை எட்டி வரும் நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வட்டி விகிதம் குறைப்புக்கு பலதரப்பினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை. மேலும் பி.எஃப். மீதான வட்டி விகிதம் நாளுக்கு நாள் குறைவது தொழிலாளர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் கூறினார்.