சென்னை: பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பக்வந்த மானுக்கு வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய ஒன்றியத்தில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றை தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கொண்டுள்ளன. புதிய பஞ்சாப் அரசுக்கு வாழ்த்துக்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பஞ்சாபின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார். பஞ்சாபின் புதிய முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் பகவந்த் மான் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். பஞ்சாப் மக்கள் திரளாகப் பங்கேற்கும் படி அவர் அழைப்பு விடுத்திருப்பதால் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.