சோளிங்கர்: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் மாசி மாத ஏகாதசி முன்னிட்டு 3நாட்களுக்கு தவனோற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசி மாத தவனோற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவர் தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் கிளி கூண்டு வாகனத்தில் சிறிய மலை அடிவாரத்தில் உள்ள நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினர். அங்கு தேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து தவனம் மற்றும் பல்வேறு மலர்களால் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி மீண்டும் ஊர் கோயிலை வந்தடைந்தார். 2ம் நாள் உற்சவத்தையொட்டி இன்று காலை தேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள் மங்கள வாத்தியங்கள் முழங்க மாட வீதியில் பவனி வந்து சிறிய மலை அடிவார நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசினம் செய்து வருகின்றனர்.