சென்னை: அனைத்து பிரிவினரும் நாலாயிரப்பிரபந்தம் கற்றறியும் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: நெல்மேனி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் வைணவ பிரபந்த பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து பிரிவினர்களிடமிருந்தும் கீழ்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்தும் ஏப்ரல் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை நிர்வாகத்தின் மூலம் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
தகுதிகளாக வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேர வயது வரம்பு 14 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும், கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பயிற்சி காலம் 2 ஆண்டுகள் தங்கி பயிற்சி பெற வேண்டும். மேற்கண்டவாறு தகுதிக்குட்பட்ட அனைத்து பிரிவினரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 12ம் தேதி மாலை 5 மணிவரை பெறப்படும். அதன் பின்னர் வரக்கூடிய எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சேர்க்கை படிவங்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றும், இந்து சமய அறநிலையத்துறையின் இணைய முகவரியான https:/hrce.tn.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொண்டு உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.