சென்னை: தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனால், விலங்குகள், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக 2021 ஜூன் 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கை வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்திடவும், சுற்றுச்சூழல் அமைப்புக்கு மீள சரிசெய்ய இயலாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதாகும்.
நியூட்ரினோ திட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள இடம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மதிகெட்டான்-பெரியார் புலிகள் வழித்தட எல்லைக்குள் வருகிறது. இது, இப்பகுதியிலுள்ள வன உயிரினங்களின் மரபணு வளர்ச்சியைப் பாதிக்கும்.
தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் 2017 நவம்பர் 27ம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவை பரிசீலிக்கும் போது கீழ்க்காணும் இரண்டு முக்கிய விஷயங்களை சுட்டி காட்டியுள்ளது: இத்திட்டத்திற்காக சுரங்கம் தோண்டப்படும் போது அதிக அளவிலான கடின பாறைகளை உடைப்பதற்காக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 6,00,000 கன மீட்டர் அளவிலான சர்னோகைட் பாறைகள் உடைக்கப்பட்டு மலையிலிருந்து மண் வெளியேற்றப்பட வேண்டும்.
மலை உச்சியிலிருந்து 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் போது மலைப்பாறை மிகப் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும். மேலும், பாறையின் செங்குத்து அழுத்தம் ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவிற்கும் அதிகமாக இருக்கும். இதனால் பாறை வெடிப்பு மற்றும் கூரை சரிவுகள் ஏற்பட வழிவகுத்திடும்.
நியூட்ரினோ ஆய்வகத்தினை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதி, மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவிலிருந்து 4.9 கி.மீ. தொலைவிலும், தென் மேற்கு தொடர்ச்சி மலையான போடி மலை காப்பு காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலை உலகளாவிய பல்லுயிர் மையமாகவும், உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் மையமாகவும் விளங்குகிறது. இவ்விடத்திற்கு கிழக்குப் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துடன் தொடர்புடையதாக உள்ளது. இங்கு புலிகளுடன் ஏனைய விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் வசித்து வருகின்றன.
மேலும், இப்பகுதி முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான சம்பை, கொட்டகொடி பகுதிகளை உள்ளடக்கியதாக போடி மலைப்பகுதியில் உள்ள சிறிய ஓடைகள் கொட்டக்குடி ஆற்றில் இணைக்கின்றன. இது வைகை அணையில் கலக்கும் முன் பெரியாற்றில் கலக்கிறது. தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கான தண்ணீர் வழங்குவதுடன் மக்களின் வாழ்வதாரத்துக்கு அடிப்படையாக இந்த நீர்பிடிப்பு பகுதி உள்ளது.
இதுதொடர்பாக 2021 செப்டம்பர் 27ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் குழு ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தினைக் கைவிட கேட்டுக் கொண்டது. இந்த பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதைக் கைவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
* மேற்கு தொடர்ச்சி மலையின் காப்புக்காடுகளின் உள்ளே இத்திட்டம் அமைய உள்ளது. இதன் வெப்பம் காரணமாக பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளும், தாவரங்களுக்கான பாதிப்புகளும் ஏற்படும்.
* வில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ளதால், புலிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
* இத்திட்டத்தால், 5 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாய பணிகள் பாதிக்கப்படும்.