கருங்கல்: கருங்கல் அருகே மார்த்தாண்டம் செல்லும் சாலையில் திப்பிறமலையில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் இரும்பு கம்பிகளினாலான அலங்கார நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர்.
போலீசார் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் ெதரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் வந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், அந்த கோயில் நுழைவு வாயிலை தரைப்பகுதியில் வைத்து அறுத்து எடுத்து அகற்றினர். இதையறிந்த கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் தலைமையிலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்து முன்னணியினர், ‘பல வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி இதுபோல அலங்கார வளைவுகள், ஆர்ச்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் அகற்ற வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் தரப்பில் பேசும்ேபாது, ‘இது ெதாடர்பாக எங்களுக்கு எந்தவித புகார்களும் வரவில்லை. புகார்கள் வரும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.இதையடுத்து பிற இடங்களில் அனுமதியின்றி அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளனவா என அதிகாரிகள் பார்வையிட சென்றனர்.
அவை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தால் அகற்றப்படும் எனவும் அவர்கள் கூறினர். பின்னர் திரும்பி வந்த அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், ‘அனுமதியில்லாத ஆக்ரமிப்புகளை பாரபட்சமின்றி 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மீண்டும் நுழைவு வாயிலை நிறுவுவோம்’ என்றனர். அதற்கு அதிகாரிகளும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.