×

சேத்துப்பட்டு அருகே விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வார்டன் போக்சோவில் கைது-சைல்டு லைன் எண்ணிற்கு வந்த புகாரால் நடவடிக்கை

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அருகே விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வார்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பத்தியாவரம் பகுதியில் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி வளாகத்தில் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 112 மாணவர்கள் தங்கி அப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதியின் வார்டனாக கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலபுரத்தை சேர்ந்த துரைபாண்டியன்(32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக துரைபாண்டியன் விடுதியில் உள்ள மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி வந்தாராம். இதுவரை 8க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது தொல்லை தாங்க முடியாத மாணவர்கள் இதுகுறித்து சைல்டு லைன் ‘1098’ என்ற எண்ணுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்க்கு தகவல் கிடைத்தது. அவர் உரிய விசாரணை நடத்தும்படி எஸ்பி பவன்குமாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, எஸ்பி உத்தரவின்பேரில் போளூர் டிஎஸ்பி குணசேகரன், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, எஸ்ஐ வரதராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விடுதிக்கு சென்று, துரைபாண்டியனை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு மாணவர்களை மிரட்டி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை சைல்டு லைன் அலுவலர் பாலாஜி, சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி போக்சோ சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ், விடுதி வார்டன் துரைபாண்டியன் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தார். பின்னர், அவரை போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் வார்டன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்படி வற்புறுத்திய சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட துரைபாண்டியனுக்கு மனைவி மற்றும் 3 வயதில் மகன் உள்ளனர்.

Tags : Warden Bokso ,Chetput , Chetput: Under the Warden Pokcho Act forcing school students staying in a hostel near Chetput to be homosexual
× RELATED ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு...