வருசநாடு : கடமலைக்குண்டு பகுதியில் கொடிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. அறுவடை செய்யும் விவசாயிகள் ரூ.200 முதல் 300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு மலையும் மலை சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தோட்டங்களில் கொடிக்காய் மரங்கள் அதிகளவில் உள்ளன. இம்மரங்களில் கொடிக்காய் அமோகமாக விளைந்துள்ளது. இவைகளை அறுவடை செய்யும் விவசாயிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில், மேகமலை மூலிகை காற்று தவழ்ந்து வருவதால், மூலிகை கொடிக்காய் என பெயரிட்டுள்ளனர். மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் தோட்டத்திற்கே வந்து கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி பிரபாகரன் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, பாலூத்து மலைப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மூலிகை கொடிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மரங்களில் கொடிக்காய் அதிகளவில் விளைந்துள்ளது. இவைகளை அறுவடை செய்து, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு அனுப்புகிறோம். மேலும், வெளியூர் வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.