பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் ஸ்ரீவைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோயில் உள்ளது. இது அந்த பகுதியில் பிரபலமான மிகவும் பழமையான கோயிலாகும். இந்த கோயில் புனரமைக்கப்பட்டு கோபுரம் மற்றும் விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கான மூன்று கால யாக பூஜையில் முழுக்க முழுக்க தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு அர்ச்சனைகளும் தமிழிலேயே செய்யப்பட்டது. தொடர்ந்து, கலசநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய கோபுரங்களுக்கு திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதில் பொன்னேரி சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெரவள்ளூர் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.