பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற நிலையில் 2-வது போட்டி பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. பெங்களூரு மைதானத்தில் சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 23 ரன்கள் எடுத்து இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 109 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.