சென்னை: பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் நேற்று முன்தினம் பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு சிறுமி மற்றும் ஒரு வாலிபர் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம் ஒப்படைத்தனர். தீவிர விசாரணையில், அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹீரா குமார் (18) மற்றும் 12 வயது சிறுமி என தெரியவந்தது. சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய ஹீரோ குமார், சென்னைக்கு கடத்தி வந்து, இங்கு வசிக்கும் உறவினர்கள் வீட்டில் தங்க முடிவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்தபோது, சிறுமி காணாமல் போனது குறித்து அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ஹீரா குமாரை பெரம்பூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியின் உறவினர்கள் பீகார் மாநிலத்தில் இருந்து சென்னை வந்ததும் சிறுமியை அவர்களிடம் போலீசார் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.