வேளச்சேரி: வேளச்சேரி ராம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிமாநில இளம்பெண்களை தங்க வைத்து, ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து, பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது. அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்தபோது, கார்த்திக் (எ) மதன் என்பவர், இந்த அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடு எடுத்து, கொல்கத்தா மற்றும் பெங்களுரூ மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கு, கொல்கத்தாவை சேர்ந்த ராகுல் (38), தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (30) ஆகியோர் புரோக்கராக செயல்பட்டதும் தெரிந்தது. இந்த இருவரை கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 இளம்பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.