மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடம்பாடி மாரி சின்னம்மன் கோயில் தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாமல்லபுரம், அடுத்த கடம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரி சின்னம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள, கோயில் குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் தெப்போற்சவ விழா நடந்தது.
மதியம் 1 மணிமுதல் மாலை 4 மணிவரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு தீர்த்தகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாரி சின்னம்மன் எழுந்தருளி நேற்று காலை 6 மணிவரை, 9 சுற்றுகள் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாரி சின்னம்மன் வீதியுலா நடந்தது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.