திருவனந்தபுரம் :குமரி-கேரள எல்லையில் உள்ள நெய்யாற்றின்கரையில் ஒரு வெள்ளி நகைக்கடை உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதியம் கடையின் உரிமையாளர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றிருந்தார். கடையில் ஒரு ஊழியர் மட்டுமே இருந்து உள்ளார். உரிமையாளர் திரும்பி வந்து பார்த்தபோது மேஜை டிராயரில் வைத்திருந்த ₹25 ஆயிரம் பணத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்தவர், கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தார்.
அதில், பள்ளி சீருடையுடன் கடைக்குள் வந்த ஒரு மாணவி, மேஜையில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே நகைக்கடை உரிமையாளர் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே பள்ளி மாணவி நகைக்கடையில் பணத்தை திருடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதைத் தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பணத்தை திருடியது நெய்யாற்றின்கரை அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மாணவியை கண்டுபிடித்த போலீசார் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியுடன் உடனே போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கூறினர். இதையடுத்து மாணவியும், அவரது பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அவர்களிடம் நகைக்கடையில் மாணவி பணத்தை திருடிய விவரத்தை போலீசார் கூறினர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பணத்தை திரும்ப கொடுப்பதாகவும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறினர். அதற்கு நகைக்கடை உரிமையாளர் சம்மதித்தார். இதையடுத்து போலீசார் மாணவியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.