பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை அரசு மாதிரி பள்ளியில் மழலையர் வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பின்னர் அக்குழந்தைகளுடன் உற்சாகமாக பேசினர். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம்.காலனி, ஜம்புலிங்கம் தெருவில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நேற்று முதல் மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். முன்னதாக, துர்கா ஸ்டாலின், செந்தாமரை ஆகியோரை மழலையர் பள்ளி குழந்தைகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருந்த குழந்தைகளுடன் இருவரும் உற்சாகமாக பேசினர்.
இதில் அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகனின் மனைவி கீதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ், மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், திமுக பகுதி செயலாளர் நாகராஜன், இளைஞரணி மகேஷ்குமார், தேவஜவஹர், வட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.