பாம்போலிம்: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் 2வது அரையிறுதியின் முதல் கட்ட ஆட்டத்தில் ஐதராபாத் எப்சி - ஏடிகே மோகன் பகான் அணிகள் இன்று மோதுகின்றன. 2019ல் அறிமுகமான ஐதராபாத் அணி, முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 லீக் ஆட்டங்களில் 38 புள்ளிகளுடன் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியு) 2வது இடம் பிடித்தது. அரையிறுதியில் 3 முறை சாம்பியனான ஏடிகே மோகன் பகானுடன் மோதுகிறது. ஏடிகே லீக் சுற்றில் 37 புள்ளிகளுடன் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி) 3வது இடம் பிடித்தது. ஐஎஸ்எல் தொடரில் ஏடிகே 6வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 4 முறை பைனலுக்கு முன்னேறியதுடன், அதிக முறை கோப்பை வென்ற அணியாகவும் உள்ளது.
ஐதராபாத் அணியும் நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன்களை பின்னுக்கு தள்ளி அரையிறுதி வாய்ப்பை எட்டி பிடித்துள்ளது. அதனால் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் 2வது அரையிறுதி முதல் சுற்றில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 2வது அரையிறுதியின் 2ம் கட்ட ஆட்டம் மார்ச் 16ம் தேதி நடக்கும்.
* இரு அணிகளும் 2019-20 முதல் இதுவரை 6 ஆட்டங்களில் மோதியுள்ளதில் ஏடிகே 2 ஆட்டங்களில் வென்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.
* நடப்புத் தொடரில் விளையாடிய 2 ஆட்டங்களில், ஏடிகே 2-1 என்ற கோல் கணக்கில் ஒரு ஆட்டத்தில் வென்றது. மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.