செய்யாறு : செய்யாறு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வசந்த உற்சவ பெருவிழாவில் நேற்று 508 பால்குட ஊர்வலம் நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 70ம் ஆண்டு வசந்த உற்சவ பெருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10ம் நாளான நேற்று காலை 508 பால்குட ஊர்வலம் பம்பை- உடுக்கை, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க நடந்தது. அதன்படி, அனக்காவூர் கிராமம் ஞானமுருகன்பூண்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருந்து தொடங்கி, திருவத்திபுரம் மாடவீதி, பஜார் வீதி, மார்க்கெட் பகுதி வழியாக 3 கி.மீ. தூரம் பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
முன்னதாக, பெண்கள் அலகு குத்தியும், அம்மன் வேடமணிந்தும், பால்குடம் ஏந்தியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அதேபோல், ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில், அம்மனை பல அவதாரங்களில் பூ மாலைகளால் அலங்கரித்து, அந்த வாகனங்களை இளைஞர்கள் தங்களது முதுகில் அலகு குத்தி இழுத்தும், கிரேனில் ஆகாயத்தில் தொங்கியபடியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.