×

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து 80 பக்தர்கள் படகில் பயணம்!!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு  திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து 1 நாட்டு படகு, 3 விசைப்படகுகள் உட்பட 4 படகுகளில் 80 பக்தர்கள் இன்று பயணம் செய்கின்றனர். ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கொரோனா தொற்று நடவடிக்கையால் இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கை, இந்தியா தரப்பில் இருந்து 100 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.  

இதையடுத்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு நாட்டுப்படகு மற்றும் 3 விசைப்படகுகளில் பாதிரியார்கள், பக்தர்கள், படகோட்டிகள் உட்பட 80 பேர் இன்று கச்சத்தீவு செல்கின்றனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்பவர்களை முழுமையாக பரிசோதனை செய்வதற்காகவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படை, மரைன் போலீசார், கியூ பிரிவு போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு அந்தோணியார் உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும் இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் 2வது நாளான நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். பின்னர் 9 மணியுடன் திருப்பலி முடிந்து கொடி இரக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.   அவர்கள் செல்லும் 3 படகுகளையும் தமிழக மீன்வளத்துறை இணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : Rameswaram ,Holy Anthony Festival of Kachtivu , Kachchativu, St. Anthony's, Festival, Rameswaram, Devotees
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...