×

பெரியபாளையம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ரத்து

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், தீர்மான பட்டியல் தாமதமாக வந்ததால் கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமையில், துணைத்தலைவர் சுரேஷ் முன்னிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு அவர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் தகவல் தெரிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் என மொத்தம் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், ஒரு கவுன்சிலரை தவிர மற்ற 17 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டனர்.

இது குறித்து புறக்கணித்த கவுன்சிலர்கள் கூறும்போது, ‘கவுன்சிலர் கூட்டம் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு முன்பு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து என்ன தீர்மானம் போடவேண்டும் என்று கவுன்சிலர்களிடம் கேட்பார்கள். ஆனால், கவுன்சிலர்களிடம் எதுவும் கேட்காமல் தலைவர் செயல்படுகிறார். தீர்மான பட்டியல் தாமதமாக வந்தது. இதனால், கூட்டத்தை புறக்கணித்தோம்’ என்றனர்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூறுகையில், ‘தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.

கூட்ட அறிவிப்பை தாமதமாக தெரிவிக்கிறார். முன் கூட்டியே தெரிவிப்பதில்லை’ என்றனர்.
மேலும், எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு நேற்று ஒரே ஒரு அதிமுக கவுன்சிலர் மட்டுமே வந்தார். அவரும் சிறிது நேரத்தில் கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

Tags : Periyapalyam ,EU , Periyapalayam Union Councilors meeting canceled
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்