சென்னை: வில்லிவாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடியை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. சென்னை வில்லிவாக்கம் எம்பார்நாயுடு தெருவை சேர்ந்தவர் டபுள் ரஞ்சித். பிரபல ரவுடியான இவர் மீது ஐசிஎப், வில்லிவாக்கம், செங்குன்றம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரவுடி டபுள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட அலெக்சின் கொலைக்கு பழி தீர்க்கவே, அவனது கூட்டாளிகள் ரவுடி டபுள் ரஞ்சித்தை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.