சத்தியமங்கலம்,: பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்தின.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நேற்று அதிகாலை வெளியேறிய 3 காட்டு யானைகள் கீழ்பவானி வாய்க்காலை கடந்து தொட்டம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியில் உள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி மற்றும் இரும்பு கேட்டை சேதப்படுத்தின.
பின்னர் விவசாயி பன்னீர்செல்வம் என்பவரது நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் போட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள அகழியை அகலப்படுத்தவும், ஆழப்படுத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.