×

இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமணங்கள் செல்லுபடியாகும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: திமுக எம்பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: இந்தியா முழுமைக்கும் சீர்திருத்த திருமணங்கள் செல்லுபடியாகும் சூழலை நமது எம்.பி-க்கள் ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணை செயலாளர் மகேந்திரன் மகன் ஆகியோரது திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் ஒரு துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்று கலைஞர், முடிவு செய்து அதை தொடங்கி வைத்தார். அதற்கு யாரை பொறுப்பாளர்களாக, தலைவர்களாக நியமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தங்கபாண்டியன், அந்த இளைஞர் அணிக்கு ஸ்டாலினைத்தான் தலைவராக நீங்கள் நியமிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். அன்றைக்கு இளைஞரணிச் செயலாளராக நான் பொறுப்பேற்றிருந்தேன் என்று சொன்னால், அதற்கு முதல் குரல் கொடுத்தவர் தங்கபாண்டியன் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னொரு செய்தியையும் நான் சொல்லியாக வேண்டும். சந்திரசேகர் இங்கே இருக்கிறார். அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பகுதியில் திமுக கொடியேற்று விழா நிகழ்ச்சி. என்னை அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவையும் மீறி நான் அங்கே சென்றேன். அங்கு கொடி ஏற்றி வைத்தேன். என்னைக் கைது செய்தார்கள். அப்போது என்னைக் கைது செய்தவர்தான் இங்கிருக்கும் சந்திரசேகர். நான் அதை நிச்சயமாக மறக்கமாட்டேன். அப்போதுகூட சொன்னார், “வேறு வழியில்லை அண்ணே, கைது செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை. தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார். கடமையை செய்யுங்கள் அதுதான் காவல்துறையின் கட்டுப்பாடு என்று அதில் நான் தலையிடமாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.

நான் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிறகு, அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாம் தான் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம்; இதனைச் சீர்திருத்தத் திருமணம் என்று சொல்லக்கூடாது.  இப்போது இதை திராவிடத் திருமணம் என்றே சொல்லலாம். ஏனென்றால் திராவிட மாடலில்தான் நம்முடைய ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது.

எனவே இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று முதன்முதலில் தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக நிறைவேற்றித் தந்தார்கள். அந்தத் தீர்மானம் இன்றைக்கு எந்த அளவிற்கு மக்களிடத்தில் பரவலாகி, விரிவாகி, பிரபலமாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் தொடர்ந்து கலைஞர் சொன்னார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இந்தச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எவ்வாறு தமிழ்நாட்டில் இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்ற நிலை இருக்கிறதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் இந்தத் திருத்ததை கொண்டுவர, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும்.  மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாம் தான் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Tags : India ,Dimugha ,KKA Stalin , Reform marriages across India should be made valid: Chief Minister MK Stalin's advice to DMK MPs
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...