சென்னை: சென்னை துறைமுகம் டிரஸ்டுக்கு சொந்தமான ரூ.100 கோடி மோசடி செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை துறைமுக டிரஸ்டுக்கு சொந்தமான ரூ.100 கோடி பணம் சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் நிரந்தர டெபாசிட் செய்யப்பட்டது. அந்த டெபாசிட் பணம், அந்த வங்கி கணக்கில் இருந்து, சென்னை துறைமுகம் டிரஸ்டின் நிதி பிரிவு துணை இயக்குநர் என்று போலி ஆவணங்கள் தயாரித்து கணேஷ் நடராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு நூதனமான முறையில் ரூ.45 கோடி தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் இந்த மோசடி குறித்து சுதாகரித்துக்கொண்டு கோயம்பேடு இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில், வங்கி கணக்கில் மீதி இருந்த ரூ.55 கோடியை முடக்கினர். இந்த மெகா மோசடி சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதிராஜா மற்றும் பணத்தை சுருட்டியதாக புகார் கூறப்பட்ட கணேஷ் நடராஜன், இடைத்தரகர் மணிமொழி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி தங்கம் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மோசடி நபர் கணேஷ் நடராஜன், இடைத்தரகர் மணிமொழி மற்றும் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோரிடம் அதிரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்த மோசடிக்கு ஆப்பிரிக்கா நாடுகளான கேமரூன், காங்கோ நாடுகளை சேர்ந்த 2 பேர் இந்த மோசடிக்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளதும், இதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் மோசடி பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் இந்த மோசடியில் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிபிஐயில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரித்து வந்தனர். விசாரணையில் இந்த மோசடியில் 11 பேர் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கமிஷன் அடிப்படையில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுடலை முத்து, விஜய் ஜெரால்டு, ராஜேஷ் சிங், சையத், ஜாகீர் உசேன், சுரேஷ்குமார், கணேஷ் நடராஜன், மணிமொழி, செல்வக்குமார், சேர்மதி ராஜா, அருண் அன்பு ஆகிய 11 பேரையும் அமலாக்கப்பிரிவு அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மோசடிக்கு ஆப்பிரிக்கா நாடுகளான கேமரூன், காங்கோ நாடுகளை சேர்ந்த 2 பேர் பெரிய அளவில் உதவி செய்துள்ளது தெரியவந்தது.