சென்னை: தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று சென்னை, நந்தனத்திலுள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: எல்காட் நிறுவனம் பழமை வாய்ந்த நிறுவனம் என்றும் அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் முதல்வர் அறிவுத்தலின்படி இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறே இரண்டாம் நிலை நகரங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்க ஏதுவாக CONNECT கருத்தரங்கங்கள் விரைவில் நடைபெற உள்ளன. அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் கணினி மற்றும் இதர வன்பொருள்களை இணையதளம் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவ்விணையதளம் பயன்பாட்டிற்கு வரும். எல்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிதி மேலாண்மை குறித்து திட்டங்கள் வகுத்து கையேடாக உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டு முழு நேர ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வழிகாட்டுதலில் எல்காட் நிறுவனம் நிர்வாக ரீதியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.