×

ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் உண்மையாக நடந்தது என்ன? விசாரணை கமிஷனிடம் ஓபிஎஸ்-இபிஎஸ் வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும்

* சேலத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

சேலம்: ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆறுமுகசாமி கமிஷனிடம் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாநகராட்சி துணை மேயராக எங்கள் கட்சியை சேர்ந்த சாரதாதேவி தேர்வு செய்யப்பட்டதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 9 மாதத்தில் இலக்கை தாண்டி பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். ஒரு முதல்வர் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது.

உலகளவில் மு.க.ஸ்டாலின் மிக சிறந்த முதல்வராகவும், அரசியல் தலைவராகவும் திகழ்கிறார். தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மீதியிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் குடும்ப தலைவிகள் பெயரில் தரப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. நாட்டியிலேயே முதல் மாநிலமாக தமிழகம் வருவதற்கு அவர் உழைத்து ெகாண்டிருக்கிறார்.

மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் நூறு சதவீதம் எதிர்க்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். இந்த பிரச்னையில் முழுக்க, முழுக்க முதல்வரை பின்பற்றுவோம். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி தமிழக காங்கிரஸ் கேட்கும். உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் குழப்பங்கள் இருந்தது. அதை மிகச்சிறந்த ஒரு அறிக்கையின் மூலமாக முதல்வர் சரி செய்துள்ளார். இது கூட்டணி தர்மத்தில் மிகப்பெரிய அம்சமாக இருக்கிறது.

விரைவில் வர இருக்கும் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நூற்றுக்கு நூறு நம்பலாம். பாலியல் குற்றங்கள் இன்றைக்கு தான் நடக்கிறது என்பது தவறு. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் மிக பயங்கரமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் கடந்த ஆட்சி எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு அநீதி, கேவலமான பிரச்னையை உண்டாக்குபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். முதல்வர் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் உள்ளத்தில் எந்தவிதமான கள்ளம், கபடமும் இல்லை என்று சொன்னால், எப்படி அவர் இறந்தார் என்பதை வெளிப்படையாக வந்து சொல்ல வேண்டும்.

அதற்காக ஆறுமுகசாமி கமிஷன் 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் வராதது ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறதா என்றும் தெரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது? ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக ஆறுமுகசாமி கமிஷனிடம் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayalalithaa ,Commission of Inquiry , Jayalalithaa, death affair, fact, investigation
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...