டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக ரூ.5,000 கோடியும், பெறப்படும் தொகையிலிருந்து ரூ.150 கோடி பங்கு மூலதனத்தையும் கொண்டதாக இருக்கும். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரி நிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் நவம்பர் 2021-ல் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறன் மேம்பாடு, புள்ளிவிவர சேகரிப்பு போன்றவற்றுடன் திறன் மேம்பாட்டுக்கான மண்டல மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பூச்சிகளால் பரவக் கூடிய மூன்று முக்கிய நோய்கள் (மலேரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடிய கருங்காய்ச்சல், யானைக்கால்) பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், க்ளூக்கோநைட், பொட்டாஷ், எமரால்டு, பிளாட்டினம் வகை உலோகங்கள், அன்டாலுசைட், சிலிமனைட் மற்றும் மாலிப்டினம் போன்ற தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க ஏதுவாக, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.