பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா கவுல் தோப்பில் உழவர் சந்தை அமைய உள்ள இடத்தில் இருந்த குடிசைகள் நேற்று ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆர்டிஓ பூங்கொடி முன்னிலையில் அகற்றப்பட்டது. பள்ளிகொண்டாவில், உழவர் சந்தை அமைத்து தரப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதில், பள்ளிகொண்டா வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வே எண் 230ல் சுமார் 22.73 ஹெக்டர் பரப்பு நிலம் கொண்ட கவுல் தோப்பு பகுதியை வருவாய் துறையினர் நேற்று பேரூராட்சிக்கு வழங்கினர். இதனைதொடர்ந்து, ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் வினாயகமூர்த்தி முன்னிலையில் உழவர் சந்தை அமையவுள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. அப்போது, குடிசைவாசிகள் சிலர் எங்களுக்கு வாழ்வதற்கு சொந்தமாக ஒரு இடம் நிரந்தரமாக ஏற்பாடு செய்து தர ஆர்டிஓவிடம் முறையிட்டனர்.
அதன்பேரில் தகுதியுள்ள 5 பேருக்கு சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை அருகே இடத்தை தேர்வு செய்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். மேலும், இடம் இல்லாத தகுதிவாய்ந்த மீதம் இருக்கும் நபர்களுக்கு இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர். அப்போது, அணைக்கட்டு துணை தாசில்தார் திருக்குமரேசன், பள்ளிகொண்டா விஏஓ சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் இந்துமதி, சர்வேயர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். குடிசைகள் அகற்றும்போது எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்னை வராமல் இருக்க சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.