நெல்லை : பாளை கேடிசி நகரில் நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த பைக் நான்கு வழிச்சாலையிலுள்ள தடுப்பு சுவர், பேரிகார்டில் மோதியதில் ஐடி நிறுவன ஊழியர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பாளை கேடிசிநகர் பி காலனியை சேர்ந்த மாடசாமி மகன் சுதாகர்(37). இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் மனைவி, இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சுதாகர் குடும்பத்துடன் பாளை கேடிசி நகரிலுள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சுதாகர், பாளை அருகேயுள்ள வசவப்பபுரத்திலுள்ள நண்பரை பார்ப்பதற்காக உறவினரான பாளை கேடிசி நகர் அருகேயுள்ள வெற்றிதிருநகரைச் சேர்ந்த ரவிசந்திரன் மகன் கோகுலகிருஷ்ணன்(20) என்பவரது பைக்கில் சென்றார். இருவரும் வசவப்பபுரத்திற்கு சென்றுவிட்டு இரவு சுமார் 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
பாளை கேடிசி நகர் போலீஸ் சோதனை சாவடி அருகே வரும் போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையின் நடுவிலுள்ள தடுப்பு சுவரிலும், அங்கிருந்த பேரிகார்டிலும் மோதியது. இதில் பைக்கிலிருந்து சுதாகர், கோகுலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்களது தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையறிந்து அங்கு வந்த பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி, மாநகர விபத்து தடுப்பு பிரிவு எஸ்ஐ நாராயணன் மற்றும் போலீசார் சுதாகர், கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.