×

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை தடுக்க பேரவை தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை தடுக்க சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அரசு தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தர வேண்டும் என்று உச்சநீதி மன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது. இதைச் செயல்படுத்துவது தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியப் பங்கு. மேலும், காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதி தீர்ப்பின் படியும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் படியும், எந்த ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கும் கர்நாடக அரசிற்கு அனுமதி கிடையாது.

மேகதாதுவில் ஒரு அணைக் கட்டுவது என்பது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரைத் தடுப்பதற்காகவே என்று கருத வேண்டியுள்ளது. இது தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும்.  மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகதாதுவில் அணைக் கட்டுவோம் என்று ஆட்சியில் உள்ளவர்கள் சொல்வது நடுவர் மன்ற தீர்ப்பையும் உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்படுவதாகும்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த குறிப்பில், தமிழ்நாடு அரசின் இசைவில்லாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சாத்தியக்கூறு இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேகதாது அணைக் கட்டும் பிரச்சனை குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள போதே, சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறையின் அனுமதி, தொழில்நுட்ப அனுமதி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் ஆகிய எதையுமே பெறாமல் கர்நாடக அரசு தனது 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணைகட்டும் திட்டத்திற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.

இத்திட்டத்திற்காக ரூ.1,000 கோடி அல்ல ரூ.5 ஆயிரம் கோடியை கர்நாடக அரசு ஒதுக்கினாலும், ஒரு செங்கல்லை கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளும். கர்நாடக அரசின் ரூ.1,000  கோடி அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் பேரார்வம் கொண்டு இது குறித்து விவாதிக்க சர்வக்கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஏற்கெனவே இது குறித்து சர்வக்கட்சிக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். ஆகையால், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை தடுக்க சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு பரிசீலித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Government of Karnataka ,Meghadau ,Information Minister ,Duraimurugan , Water Resources Minister Duraimurugan
× RELATED மாநகராட்சி எல்லைகள்...