×

ஐஎஸ்எல் கால்பந்து கொல்கத்தாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா: கோவாவில் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதன் கடைசி லீக் சுற்று போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் ஏ.டி.கே. மோகன் பகான் (கொல்கத்தா) மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. பின்னர் இரண்டாவது பாதியில் 56வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ரிட்விக் தாஸ் அந்த அணியின் முதல் கோலை அடித்தார். பின்னர் ஏ.டி.கே. மோகன் பகான் அணி கடுமையாக முயன்றும் இறுதிவரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தியது.

இதையடுத்து 11ம்தேதி இரவு 7.30 மணிக்கு அரையிறுதி முதல் சுற்றின் முதல் போட்டி நடக்கிறது. இதில், இந்த தொடரில் முதலிடம் பிடித்த ஜாம்ஷெட்பூர் அணியுடன் 4வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதுகிறது. 12ம்தேதி அரையிறுதி முதல் சுற்றின் 2வது போட்டி நடக்கிறது. இதில் தொடரில் 2வது இடம் பிடித்த ஐதராபாத் அணியுடன் 3வது இடம் பிடித்த கொல்கத்தா மோதுகிறது. இதைத்தொடர்ந்து 15ம் தேதி அரையிறுதியின் 2வது சுற்றில் முதல் போட்டியில் கேரளா-ஜாம்ஷெட்பூர் அணியும், 16ம்தேதி நடைபெறும் 2வது போட்டியில் ஐதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த போட்டிகளின் முடிவுக்கு பின்னர்தான் இறுதிபோட்டிக்கு தகுதி பெறும் அணிகள் தெரியவரும்.

Tags : ISL ,Kolkata ,Jamshedpur , ISL, Football, Kolkata, Jamshedpur
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை