வாஷிங்டன்: உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. உலக வங்கி கடன் தொகுப்பில் பல நாடுகளில் இருந்து கடன்கள், கடன் உத்தரவாதங்கள், மானியங்கள் ஆகியவை ஒன்றாக சேர்த்து வழங்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகிறது. பீரங்கி தாக்குதல், ஏவுகணை, வான்வழி தாக்குதல் என ரஷ்ய தனது பலத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து போராடி வருகிறது.
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலால் உக்ரைன் நகர கட்டிடங்கள் உருக்குலைந்துள்ளது. பல்வேறு பகுதி மக்களும் வெளியேறி வருகின்றனர். கீவ், கார்கிவ் நகர் பகுதியினர் எல்லையோர நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு குடியிருப்புகள் விமான நிலையம், அணு மின்நிலையம் உள்ளிட்டவை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியத்தில் உக்ரைன் கட்டங்கள் தரைமட்டமாகியுள்ளன. போர் காரணமாக, இதுவரை 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின், ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.
அதே சமயம், மனிதாபிமான அடிப்படையில் சில நகரங்களில் பொதுமக்கள் வெளியேற சிறப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தற்காலிக போர் நிறுத்தத்தையும் அறிவித்தது. ஆனாலும், பல இடங்களில் போர் நிறுத்தத்தை முறையாக ரஷ்யா கடைப்பிடிக்கவில்லை என உக்ரைன் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இதனிடையே பல்வேறு மட்டத்திலும் மீண்டு எழவேண்டிய உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடன் மற்றும் மானியங்களின் தொகுப்பை வழங்க இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளதாக உலக வங்கி அறிவித்தது. இந்த தொகுப்பில், முந்தைய உலக வங்கி கடன் 350 மில்லியன் டாலரும் உள்ளடக்கம். இத்துடன் நெதர்லாந்து மற்றும் ஸ்வீடனின் கடன் உத்தரவாதங்கள் மூலம் சுமார் 139 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன், டென்மார்க், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஐஸ்லாந்தின் நாடுகளிலிருந்து மானியங்களாக 134 மில்லியன் டாலரும், ஜப்பானில் இருந்து 100 மில்லியன் டாலர் நிதியுதவியும் இடம்பெற்றுள்ளது.