×

ஆற்காடு அருகே அதிகாலை பயங்கரம் காதல் திருமணம் முன்விரோதத்தில் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை-மருமகன், சகோதரர் உட்பட 3 பேர் கைது

ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல்  கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் என்கிற சசிதரன்(45), விவசாயி. இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் சினேகாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் சினேகா பக்கத்து ஊரான கீரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு காதலர்கள் மாயமானார்கள்.

அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட  இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. அதிலிருந்து இரண்டு குடும்பத்தார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில்  கடந்த ஆண்டு விக்னேஷ்வரனின் தந்தை மணி என்பவரை வழிமறித்த சசிதரன் தரப்பினர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மணி கை உடைந்து படுகாயமடைந்தார்.  அதேபோல் நேற்றுமுன்தினம் இரவும் சசிதரன், அவரது மகன் சுரேந்தர் ஆகியோர் கீரம்பாடி சென்று விக்னேஷ்வரன் வீட்டின் முன்பு தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சசிதரன் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். கீரம்பாடி பஸ் நிறுத்தம் வழியாக செல்லும் போது அங்கு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதற்காக விக்னேஷ்வரனின்  தந்தை மணி நின்று கொண்டிருந்ததைக் கண்டு அவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து மணி தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன்,  அவரது அண்ணன் பசுபதி, பெரியப்பா சவுந்தர்ராஜன்  உள்ளிட்ட சிலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள்  சசிதரன் அங்கிருந்து தனது நிலத்துக்கு சென்றுள்ளார். கீரம்பாடி சுடுகாடு அருகே சென்றபோது அவரை வழிமறித்த விக்னேஷ்வரன் தரப்பினர்  கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள்.இதில் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்த சசிதரனை தகவலறிந்த அவரது உறவினர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையே சசிதரன் இறந்தார்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதனைத்தொடர்ந்து மணி(45), விக்னேஷ்வரன்(25),  பசுபதி(27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.மேலும் சவுந்தரராஜன் உள்ளிட்ட சிலரை தேடிவருகின்றனர். காதல் திருமணத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாமனாரை மருமகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Arcot , Arcot: Sudhakaran alias Sasitharan (45), a farmer, hails from Kadappanthangal Gangai Amman Koil Street next to Arcot, Ranipettai District.
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...