பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே அரசு பள்ளி மாணவி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை புரிய கண்களை கட்டிக்கொண்டு 1.46 நிமிடங்களில் 106 தேங்காய்களை உடைத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சுருதி. இவரது பெற்றோர் நெசவு தொழில் செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவி பீனிக்ஸ் உலக சாதனை புரிய கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு இரண்டு நிமிடங்களில் 106 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை செய்து காட்டினார்.
இதனையொட்டி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன்(பொறுப்பு) வரவேற்றார்.தொடர்ந்து பள்ளி வளாக மேடையில் மாணவி சுருதியின் சகோதரி காஞ்சனாவை படுக்க வைத்து சுற்றிலும் 106 தேங்காய் வைத்தனர். அனைவரின் முன்னிலையிலும் சுருதியின் கண்களை மூடி கருப்பு துணியால் இறுகக்கட்டி கையில் சுத்தியல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 10 மணி அளவில் மாணவி தனது தங்கையின் உடலைச் சுற்றி வைத்திருந்த தேங்காய் உடைக்க தொடங்கினார்.
சரியாக 1.46 நிமிடங்களில் 106 உடைத்து பீனிக்ஸ் உலக சாதனையை நிகழ்த்தினார். உலக சாதனையை நிகழ்த்திய மாணவி மற்றும் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்திய மாணவி சுருதி உடன் இருந்த அவரது தங்கை காஞ்சனாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டி கேடயம் வழங்கினார்.
மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக இந்த மாணவி 2020ம் ஆண்டு கண்களை கட்டிக்கொண்டு முனுகப்பட்டு பகுதியிலிருந்து வந்தவாசி வரை சுமார் 43 கி.மீ. தொலைவிற்கு சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.