புதுக்கோட்டை: கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை திமுக-வின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி 11-வது வார்டில் வென்ற, இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு துணை தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் முத்தமிழ் செல்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென தி.மு.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார்.
இது போன்று கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வரின் உத்தரவை ஏற்று பல திமுக உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும்,பேரூராட்சி செயல் அலுவலருமான செந்தில் குமாரிடம் அவர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.