சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய பப்ஜி மதனின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இது மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதால் வழக்கு மேலும் சில வாரம் தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே 8 மாதங்களாக சிறையில் உள்ளதால் விடுவிக்க வேண்டும் என பப்ஜி மதன் தரப்பில் வாதிடப்பட்டது. ஆன்லைன் விளையாட்டில் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் கடந்த ஆண்டில் தொடர்ந்து வெளியானது.
இதுகுறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் மதன் கைது செய்யப்பட்டாா். பின் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய பப்ஜி மதன் மனு கடந்த ஆண்டு டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தள்ளுபடி செய்துள்ளது. இன்று விசாரணகை்கு வந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.