ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்ததால் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அருகே உள்ள தாமரைக் குளம் பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்தில் நேற்று மதியம் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சிறிதளவில் பிடித்த தீயானது மளமளவென பரவி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏலகிரி மலை மீது தீப்பிடித்து எரிந்தது. இதனால் மலை மீது இருந்த அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகளும் எரிந்து நாசமானது.நாள்தோறும் மர்ம நபர்கள் மலையடிவாரத்திற்கு சென்று மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதால் புகைப்பிடித்து வீசி விட்டுச் செல்கின்றனர்.
இதனால் காய்ந்த நிலையில் உள்ள சருகுகள் தீப்பிடித்து மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகிவிட்டது.எனவே இது போன்ற நபர்களை கண்காணிக்க வனத்துறையினர் அவ்வப்போது கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அவ்வாறு கண்காணிக்கும் போது மர்ம நபர்கள் மலையடிவாரத்திற்கு வந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் காட்டுப் பகுதியில் இருக்கும் அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் போன்றவைகள் எரிந்து நாசம் ஆவதிலிருந்து கட்டுப்படுத்தப்படும். எனவே துறை அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் நுழையும் மர்மநபர்களையும், காட்டுக்குத் தீ வைத்த நபர்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.