மொரதாபாத்: பாலிவுட் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா, தமிழில் ‘லிங்கா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் பங்கேற்க, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார். அவருக்கு 4 தவணைகளில் ரூ.37 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், கடைசிநேரத்தில் அவர் வர மறுத்துவிட்டார். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொடுத்த பணத்தை சோனாக்ஷி சின்ஹா திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி புகார் தரப்பட்டது. இதனால், சோனாக்ஷி சின்ஹா உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சோனாக்ஷி சின்ஹா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய இடைக் கால தடை விதித்தது. இந்நிலையில், மனுதாரர் பிரமோத் சர்மாவின் மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத சோனாக்ஷி சின்ஹா, அவரது ஆலோசகர் அபிஷேக் சின்ஹா வுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தார். கைதுக்கு விதிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு முடிந்தநிலையில், விசாரணை நீதிமன்றம் தற்போது சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து இருக்கிறது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 25ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.