வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் சுற்று சூழலை பாதுகாத்திடும் வகையில் கிராமத்தை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் கனி வகை மரங்கள், நிழல் தரும், சுற்று சூழலுக்கு ஏற்ற மரங்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, முன்னதாக குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலங்களை சுற்றிலும் நடப்படும் மரக்கன்றுகளை பாதுகாத்திட உயிர்வேலிகள் என அழைக்கப்படும் மூங்கில் செடிகளை கிராமப்புற இளைஞர்கள், முதியவர்கள், தன்னார்வலர்கள், தனியார் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தரிசு நிலங்கள் சுற்றிலும் மூங்கில் செடிகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஞானவேல், சூரியகாந்தி, பூபதி, கற்பகம், சேஷாத்ரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எல்லப்பன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.