கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை மற்றும் மசினகுடி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பனிக்காலம் முடிந்து கோடை காலம் துவங்க உள்ள நிலையில் வனப்பகுதியில் உள்ள மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து வறட்சிக்கு அறிகுறியாக காணப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் ”பியூட்டியா மோனோஸ்பெர்மா”என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிளேம் ஆப் தி பாரஸ்ட் சிவப்பு நிற மலர்களை வனப் பகுதிகளில் அதிகமாக காணமுடிகின்றது.
வனப்பகுதியில் உள்ள மரங்கள் செடிகொடிகளை பெரும்பாலும் இலைகள் உதிர்ந்து காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மலர்கள் தொலைவிலிருந்து பார்க்கும்போது நெருப்பு எரிவதுபோல் தெரிவதால் அதற்கு பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்களின் இதழ்களும் நெருப்பு பிளம்பு போலவே காணப்படும். இந்த பூக்களில் உள்ள தேன் இந்த காலகட்டத்தில் பறவைகள், தேனீக்கள் மற்றும் வண்டுகளுக்கு உணவாக அமைவதோடு மகரந்த சேர்க்கைகும் பெரும் பங்கு வகிக்கிறது.
மரங்கள் செடிகள் காய்ந்து வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுவரும் நிலையில் செந்நிறமான பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
வழக்கமாக டிசம்பர் ஜனவரி மாதத்தில் இங்கு மலர்கள் பூக்கத் துவங்கும் என்றும் கடந்த வருடம் மழை காலம் அதிகமாக காணப்பட்டதால் சற்று தாமதமாக பூத்துள்ளதாகவும், இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், நேபால், இலங்கை, மியான்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், மற்றும் தெற்கு இந்தோனேஷியா நாடுகளில் இந்த வகை மலர்கள் அதிகம் காணப்படுகின்றன.