மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால், பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு அளித்து வந்த சேவைகளை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனை தாக்கும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டிற்கு தந்து வரும் தங்கள் சேவைகளை நிறுத்தி வைப்பதாக சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை தெரிவித்துள்ளன.
விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக வரும் நாட்களில் பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் எனவும் விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் செயல்படாது எனவும் வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவில் வேலை செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது.
விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் அறிவிப்பால் தங்கள் நாடு அரசு வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என ரஷ்யா விளக்கமளித்துள்ளது.