×

வாலாஜாபாத் அருகே பரபரப்பு தாயிடம் தகராறு செய்த தம்பி சரமாரி வெட்டி கொலை: அண்ணனுக்கு வலை

வாலாஜாபாத்: மது அருந்தி போதையில்,  தாயிடம் தகராறு செய்த தம்பியை சரமாரியாக கத்தியால் வெட்டி அண்ணன் கொலை செய்தார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், வாலாஜாபாத் அருகே களியனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபாத் அடுத்த களியனூரை சேர்ந்தவர்  தட்சிணாமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி முகிலா. இவர்களுக்கு லிங்கேஸ்வரன் (20),  தேவபிரகாஷ் (18) ஆகிய மகன்கள் உள்ளனர்.லிங்கேஸ்வரன் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். தேவபிரகாஷ் வேலைக்கு செல்லாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார். மேலும், மது போதைக்கு அடிமையாகி வீட்டில், பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேவபிரகாஷ், மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார். அங்கு தாய் முகிலாவிடம், மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். இதை பார்த்த அண்ணன் லிங்கேஸ்வரன், அதை தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் தூங்க சென்றனர். ஆனால், இரவு முழுவதும் விழித்து இருந்த லிங்கேஸ்வரன், அடிக்கடி தாயிடம் தகராறு செய்து  பணம் வாங்கி செல்லும்  தம்பியை நினைத்து ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சென்ற அவர், தம்பியை சரமாரியாக வெட்டினார். இதில் தேவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தர். உடனே லிங்கேஸ்வரன், அங்கிருந்து தப்பிவிட்டார்.தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து   தலைமறைவான லிங்கேஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.



Tags : Walajabad riots , The commotion near Walajabad Brother who had a quarrel with his mother cut and killed a volley: web for brother
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை