×

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண் சரிவு: 2 தொழிலாளர் பலி.. உடல்களை மீட்கும் பணி தீவிரம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டதால் 2 வடமாநில தொழிலாளர் சிக்கி பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருவதால் உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த மதூர், சிறுதாமூர் மற்றும் சுற்றியுள்ள மலை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் திருமுக்கூடல், பழையசீவரம் சாலை வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன. இந்த கல்குவாரி வாகனங்களால் சாலைகள் பழுதாவதுடன் அவ்வப்போது விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. மேலும் கல்குவாரியில் கற்கள் பெயர்தெடுக்க அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுகின்றன. இதனால் கல்குவாரியை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகள் பழுதடைவதுடன், மக்கள் அச்சத்துடனே வசிக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும் கல்குவாரிகளில் வெளியேறும் தூசியால் காற்று மாசடைவதுடன் பொது மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. கல்குவாரிகளில் பல அடி ஆழம்வரை கற்கள் பெயர்த்தெடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கிராமங்களில் குடிநீர் பற்றக்குறை ஏற்படுகிறது. இவ்வாறு கல்குவாரியால் கிராம மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கல்குவாரிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் கற்கள் பெயற்தெடுக்கும் பணி நடக்க இருந்தது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் சுமார் 300 அடி ஆழ பள்ளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பள்ளத்திற்கு அருகில் இருந்த மலையில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் பொக்லைன் இயந்திரம் சிக்கியது. மேலும் வடமாநிலத்தை சேர்ந்த ஷேர்க்கான் அன்சாரி (35), சுனில்குமார் (40) ஆகியோர் சிக்கியதாக கூறப்படுகிறது.தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மண் சரிவில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மழை பெய்தது. மேலும், இருட்டாகி விட்டதால் மீட்பு பணி மந்தமானது. தகவல் அறிந்து மாவட்ட எஸ்பி சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினார். இன்று காலையில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண் சரிவு: 2 தொழிலாளர் பலி.. உடல்களை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Uttarmerur ,Uttara Merur ,North ,Calquary ,Uttaramerur ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை