×

காரைக்காலில் மழையால் நெல் அறுவடை கருவாடு உற்பத்தி பாதிப்பு

*விவசாயிகள், மீனவர்கள் அவதி

காரைக்கால் : காரைக்காலில் நேற்று முதல் பெய்து வரும் திடீர் மழையால் நெல் அறுவடை மற்றும் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர பகுதிகளில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் காரைக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழையால் காரைக்கால் பகுதியின் பிரதான தொழில்களான விவசாயம் மற்றும் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெடுங்காடு, அம்பகரத்தூர், கோட்டுச்சேரி மற்றும் போலகம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று கொண்டிருப்பதால் தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை செய்த நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் படுத்தாவால் மூடி பாதுகாத்து வருகின்றனர்.

 இதே போல் காரைக்கால் பிரதான தொழிலில் ஒன்றான கருவாடு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ கிராமங்களான காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட இடங்களில் கருவாடிற்காக
காய வைத்திருந்த மீன்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. விடாமல் பெய்து வரும் மழையால் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Karakkal , Karaikkal, Embryo, farmers, fisherman
× RELATED புதுச்சேரியில் நிறைய பிரச்னைகள் உள்ள...