திருவண்ணாமலை : திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் 1,327 டன் உரம் நேற்று தூத்துக்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க வேளாண்மை துறை மூலம் போதிய உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் போதிய உரம் வகைகளை குடோன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1,327 மெட்ரிக் டன் உரம் நேற்று முன்தினம் தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில் மூலம் நேரடியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு லாரிகள் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஆய்வு அலுவலர் எம்.என்.விஜயகுமார் ஆய்வு செய்தார்.