×

பரமக்குடியை 53 ஆண்டுக்கு பின் கைப்பற்றியது திமுக ‘அரியணை’ ஏறினார் கணவர் : ஆனந்த கண்ணீர் விட்டார் மனைவி

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி தலைவர் பதவியை 53 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது. நகர்மன்ற தலைவரான கணவரை மனைவி கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி தலைவர் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. இதில் திமுக சார்பாக 24வது வார்டு கவுன்சிலரான, பரமக்குடி நகர் தெற்கு பொறுப்பாளர் சேதுகருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது மனைவி சுதா ராணி, சேது கருணாநிதியை கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர் ஏற்கனவே இரண்டு முறை நகர்மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். பரமக்குடி நகராட்சி தலைவர் பதவியை 53 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Paramakudi ,Ananda , Paramakudi, Chairman, LocalBody Election
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு