திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஓட்டல் உள்ளது. நேற்று இரவு அந்த ஓட்டலுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு கணவனும், மனைவியும் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிப்பறைக்கு சென்றார். அப்போது கழிப்பறை ஜன்னல் அருகே ஒரு வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதை அந்த பெண் கவனித்தார். உடனே அதை திறந்து பார்த்தார். அப்போது அதில் ஒரு செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்தவர், உடனே கணவனிடம் கூறினார். இதுதொடர்பாக அவர்கள் பரோக் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கழிப்பறையில் கேமராவை வைத்தது அந்த ஓட்டலில் பணிபுரியும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த துபைல் (23) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் துபைலை கைது செய்து கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.